பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் தகுதியுள்ள மாணவர்களுக்கும், மத்திய அரசுப் பணியில் சேர்வோருக்கும் 27% ஓபிசி (பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனாலும், மத்திய அரசின் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் ஓபிசி பிரிவை சேர்ந்த அனைவருக்கும் இந்த இட ஒதுக்கீடு கிடைக்காது.
கிரீமி லேயர் அல்லாதவர்களுக்கே கல்வி நிறுவனங்களிலும் மத்திய அரசு வேலைகளிலும் பொது துறை நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
இது எப்படி நிர்ணயிக்கப்படுகிறது, யாருக்கெல்லாம் ஓபிசி சான்றிதழ் கிடைக்கும், தகுதி உடையவர்கள் இந்தச் சான்றிதழை எப்படிப் பெறுவது?
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கிரீமி லேயர் என்றால் என்ன?
ஓபிசி பிரிவுகளில், குறிப்பிட்ட வருமான வரம்பிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டும் இட ஒதுக்கீட்டு பலன்களை வழங்குவதுதான் கிரீமி லேயர் அல்லாத சான்றின் நோக்கம் ஆகும். ஓபிசி வகுப்பினரில் கிரீமி லேயரை அடையாளம் காண 1993-ம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது. அப்போது முதல் கிரீமி லேயருக்கான வருமான உச்சவரம்பு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அவ்வபோது உயர்த்தப்பட்டு வருகிறது.
2017ம் ஆண்டு இந்த உச்ச வரம்பு ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது. மத்திய அரசு வழங்கும் இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு இந்த சான்று தேவைப்படுகிறது. இந்த சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.
கிரீமி லேயர் எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது?
ஒருவரின் பெற்றோரின் வருமானத்தை பொருத்தே அந்த நபர் கிரீமி லேயர் பிரிவை சேர்ந்தவரா இல்லையா என்பது முடிவு செய்யப்படுகிறது. விண்ணப்பிக்கும் நபரின் வருமானம், அவரது கணவர் அல்லது மனைவியின் வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
ஒடிஷா அரசியலில் இருந்து வி.கே.பாண்டியன் விலகியது ஏன்? நவீன் பட்நாயக் கூறியது என்ன?
கிரிக்கெட்: இந்தியாவிடம் தோற்றதால் கொந்தளிக்கும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள்
கிரீமி லேயர் அல்லாதவர்கள் யார்?
எளிதாக சொல்ல வேண்டுமானால் ரூ.8 லட்சத்துக்கும் கீழ் ஆண்டு வருமானம் கொண்டவர்கள் கிரீமி லேயர் அல்லாதவர்களாக கருதப்படுவர். எனினும் இந்த வருமானக் கணக்கீட்டில், விண்ணப்பம் செய்பவரின் ஊதியம், குடும்ப ஊதியம் மற்றும் குடும்பத்திற்கு விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானம் ஆகியவை எடுத்துக் கொள்ளப்படாது.
ரூ. 8 லட்சத்துக்கு எவை விதிவிலக்கு?
வருமானத்தை கணக்கிடும் போது, ஊதியம், சொத்து விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய், வாடகை வருவாய் என பல்வேறு ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும்.
உதாரணம் 1:
ஒருவருக்கு ஆண்டு ஊதியம் ரூ.10 லட்சம், விவசாயத்திலிருந்து ரூ.10 லட்சம், பிற வழிகளிலிருந்து அவருக்கு ரூ.2 லட்சம் வருமானம் கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். இவற்றில் ஊதியம் மற்றும் விவசாய வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. எனவே அந்த நபரின் வருமானம் ரூ.2 லட்சமாக கருதப்பட்டு, அவருக்கு கிரீமி லேயர் அல்லாதவருக்கான சான்றிதழ் வழங்கப்படும்.
உதாரணம் 2 :
ஒருவருக்கு ஊதியம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம், விவசாயத்திலிருந்து ரூ.2 லட்சம் வருமானம் கிடைக்கிறது, பிற ஆதாரங்களிலிருந்து ரூ.9 லட்சம் வருமானம் கிடைக்கிறது. இந்த சூழலில், ஊதியம் மற்றும் விவசாய வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. எனவே அவரது வருமானம் ரூ.9 லட்சமாக கருதப்படும். அது வருமான உச்சவரம்பான ரூ.8 லட்சத்துக்கும் மேலாக இருப்பதால் அவருக்கு கிரீமி லேயர் அல்லாதவருக்கான சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது. அவருக்கு இட ஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்காது.
நிலவின் வளங்களை கைப்பற்ற புதிய விண்வெளி பந்தயம் - முந்துவது யார்?
நிர்மலா சீதாராமன், எல். முருகனுக்கு மோதி அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு - இது அண்ணாமலைக்கு உணர்த்தும் செய்தி என்ன?
பட மூலாதாரம், Getty Images
அரசு ஊழியர்களுக்கு இது பொருந்துமா?
ஓபிசி இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு ரூ.8 லட்சம் வருமான உச்ச வரம்பு விதிக்கப்பட்டிருந்தாலும், சிலர் இந்த இட ஒதுக்கீட்டுக்கு தகுதி பெறமாட்டார்கள்.
அரசியல் சாசன பதவிகள் வகிப்போருக்கு ஆண்டு வருமானம் என்னவாக இருந்தாலும், அவர்களுக்கு ஓபிசி இடஒதுக்கீடு கிடையாது. குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்ட பதவிகளில் இருப்போர் கிரீமி லேயராக கருதப்படுவர்.
ஒருவரின் பெற்றோர் மத்திய அரசு பணிகளில் குரூப் ஏ, மாநில அரசுப் பணிகளில் கிளாஸ் 1 பிரிவு ஊழியராக இருந்தால் அவருக்கு ஓபிசி இட ஒதுக்கீட்டுக்கான கிரீமி லேயர் அல்லாதவர் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது. பெற்றோரில் ஒருவர் குரூப் ஏ பணியில் இருந்தாலும் அவருக்கு கிடைக்காது.
அதே போன்று, ஒருவரின் பெற்றோர் குரூப் பி பிரிவு ஊழியராக தங்களது 40 வயதுக்கு முன்பே பணியாற்ற தொடங்கியிருந்தால் அவருக்கு இந்த இட ஒதுக்கீடு பொருந்தாது.
அதே சமயம் பெற்றோரில் ஒருவர் குரூப் பி ஊழியராக சேர்ந்து, தனது 40வது வயதுக்கு முன் குரூப் ஏ ஊழியராக பதவி உயர்வு பெற்றிருந்தால், அவரது பிள்ளைகளுக்கு ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்காது.
ஒருவரது பெற்றோர் மத்திய அரசு பணிகளில் குரூப் சி அல்லது குரூப் டி, மாநில அரசுப் பணிகளில் கிளாஸ்-111, கிளாஸ்-1V பிரிவில் ஊழியராக இருந்தால் அவருக்கு கிரீமி லேயர் அல்லாதவருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு, இட ஒதுக்கீட்டுக்கு தகுதியானவராக கருதப்படுவார். பெற்றோரில் ஒருவர் இந்த பணிகளில் இருந்தாலும், அவருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும். எதிர்காலத்தில் அவரது பெற்றோர் குரூப் பி ஊழியராகவோ, குரூப் ஏ ஊழியராகவோ பதவி உயர்வு பெறுவது இந்த இட ஒதுக்கீட்டுக்கு தடையாகாது.
அட்லாண்டிக்கை விட பசிபிக் பெருங்கடலின் நீர்மட்டம் 20 செ.மீ. மேலே இருக்க என்ன காரணம்?
நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரும் மாணவர்கள் - சாத்தியமா?
பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பொருந்துமா?
மத்திய மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு ஓபிசி இட ஒதுக்கீடு கிடையாது, ஏனென்றால் அவர்கள் கிரீமி லேயராக கருதப்படுவர். அதே நேரம், அந்த நிறுவனங்களில் பணிபுரியும் கீழ் நிலை ஊழியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களில், அனைத்து செயல் நிலை பதவிகளும், அதாவது வாரிய அளவிலான நிர்வாகிகள் மற்றும் நிர்வாக அளவிலான பதவிகள், அரசின் குரூப் 'ஏ' பதவிகளுக்கு சமமாகக் கருதப்பட்டு, கிரீமி லேயர் என்று வகைப்படுத்தப்படும்.
பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு ஸ்கேல்-1 மற்றும் அதற்கு மேல் மத்திய அரசில் குரூப் 'ஏ' க்கு சமமாகக் கருதப்பட்டு கிரீமிலேயர் என்று கருதப்படும்.
பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் கிளார்க் மற்றும் பியூன்களுக்கு, அவ்வப்போது திருத்தப்படும் வருமானத் தேர்வு பொருந்தும்.
ஜேஇஇ மதிப்பெண் மூலம் ஐஐடி தவிர வேறு எந்தெந்த கல்லூரிகளில் சேர முடியும் தெரியுமா?
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் சீற்ற எச்சரிக்கை - இதற்கும் சுனாமிக்கும் என்ன ஒற்றுமை?
பட மூலாதாரம், Getty Images
வழக்கறிஞர்கள், மருத்துவர்களுக்கு ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்குமா?
வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பட்டய கணக்காளர்கள் போன்ற பணிகளை செய்பவருக்கு அந்த பணியின் மூலமாக கிடைக்கும் வருவாய் ஓராண்டுக்கு கணக்கிடப்பட்டு அந்த வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மேலாக இருந்தால் இந்த சான்று கிடைக்காது. குறைவான வருமானம் இருப்பின் சான்று பெற்று இட ஒதுக்கீட்டு பலன்களை பெற முடியும்.
ஊதியம், விவசாய வருமானம் அல்லாத பிற ஆதாரங்கள் என்னென்ன?
மாத ஊதியம், விவசாய வருமானம் அல்லாமல், ஒருவருக்கு வாடகை, வட்டி, சொத்து விற்பனை உள்ளிட்ட ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த வருமானம், கடைசி மூன்று ஆண்டுகளில் ரூ.8 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே அவருக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது. ஏதாவது ஓரு ஆண்டில் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் இருந்தாலும் அவர் இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்.
ராமர் கோவில் கட்டியும் அயோத்தியில் பாஜக தோல்வி ஏன்? பிபிசி கள ஆய்வு
சூழலியல் போராளியாக மாறிய பெண் தூய்மைப் பணியாளர் - காணொளி
ஓபிசி இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் எங்கெல்லாம் பயன்படும்?
பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசு பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் ஓபிசி இட ஒதுக்கீடு பெறுவதற்கு இந்த சான்றிதழ் அவசியமானதாகும். ஐஐடி, திருவாரூரில் செயல்படும் மத்திய பல்கலைக் கழகம், புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம், திருச்சி என்ஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கையின் போது 27% ஓபிசி இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு இந்த சான்றிதழ் தேவைப்படும்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெறலாம். அதே போன்று நெய்வேலி நிலக்கரி கழகம், பெல், விமானத்துறை போன்ற மாநில, மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணியில் இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு இந்த சான்றிதழ் தேவைப்படும்.
அகில இந்திய ஓபிசி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கு.தனசேகர் கூறுகையில், “கிரீமி லேயர் என்பது வருமானத்தையும் சமூக அந்தஸ்தையும் அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டது. அரசின் குரூப் ஏ பிரிவு ஊழியர்களுக்கு பணியில் சேர்ந்த உடனே ரூ.8 லட்சம் ஆண்டுக்கு கிடைக்காது. ஆனால் அவர்களுக்கான சமூக அங்கீகாரம் கணக்கில் கொண்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.” என்றார்.
சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
கிரீமி லேயர் அல்லாதவருக்கான சான்றிதழை பெறுவதற்கு தங்கள் வசிப்பிடத்துக்கு உரிய தாசில்தாரிடம் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்.
அல்லது tnesevai.tn.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று ஆதார், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, வருமான வரி தாக்கல் செய்ததற்கான சான்று ஆகியவை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)